Friday 9 March 2018

தாரை

தாரை

சுமார் 12 அடி நீளத்தில், ஊதும்பகுதி சிறுத்தும், இடைப்பகுதி மேல்நோக்கி வளைந்தும், அடிப்பகுதி அகன்றும் காணப்படும் வித்தியாசமான பழந்தமிழ் ஊது கருவியே தாரை. மரியாதையின் அடையாளமாகக் கருதப்படும் கிராமிய இசைக்கருவிகளில் இது முதன்மையானது. கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போதும், தேர்த்திருவிழா காலத்திலும், கொண்டாட்டங்களிலும் இக்கருவி இசைக்கப்படுவதுண்டு. தாரை இசைத்து, தப்பட்டை அடித்து வரவேற்பு வழங்குவதும், சடங்குகளை நிகழ்த்துவதும் தமிழ்ச்சமூகத்தின் மிக முக்கியக்கூறுகளில் ஒன்று.
பாலைப்பண், குறிஞ்சிப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், கௌசிகம், தோதிறம், சீராகம், காந்தாரம், செந்துருத்தி, படுமலைப்பண், நைவளப்பண், அரும்பாலைப்பண் என பழந்தமிழ் இசையில் 11,991 பண்கள் இருந்ததாகச் சொல்கிறது சிலப்பதிகாரம். உலகில் வேறெந்த இசை வடிவத்துக்கும் இல்லாத பெருஞ்சிறப்பு இது. இசையாலும் கூத்தாலும் இறைவனையே வசியம் செய்தவர்கள் தமிழர்கள். இம்மண்ணில் இருந்தே இசையறியும் நுட்பம் உலகுக்கெல்லாம் பரவியதாகச் சொல்கிறார்கள் அறிஞர்கள். இசைத்தமிழின் பண்சிறப்பும் தாளக்கோட்பாடுகளும் எண்ணற்ற இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இயற்கையைச் சார்ந்து அமைந்த அந்தப் பண்களைப் போலவே, அவற்றுக்கான இசைக்கருவிகளும் இயற்கைத் தன்மை பொருந்தியவை. தாரையின் ஆதிவடிவமும் அவ்விதமானதே. இதன் மூலக்கருவி, விலங்குகளின் கொம்பு.
நாதஸ்வரம், எக்காளம், பூரி, வாங்கி, பாங்கு, திருச்சின்னம் போன்ற பிற்கால காற்றுக்கருவிகள் அனைத்தும் கொம்பின் தொடர்நிலைக் கருவியான தாரையின் மருவிய வடிவங்களே. ஐந்தாறு பாகங்களைக் கொண்ட தாரை, எளிதாகக் கழற்றி மாட்டும் வசதியோடு உருவாக்கப்படும். தற்காலத் தாரைகள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
‘‘தாரை என்றால் சீரான, இடைநிற்காத இசைதரும் கருவி என்று பொருள். இக்கருவியில் இருந்து தோன்றும் இசை, காற்றின் தன்மைக்கேற்ப இடைநிறுத்தம் இல்லாமல் ஒலிக்கும். நாதஸ்வரம் போல காற்றை வசப்படுத்தி இக்கருவியை இசைக்க முடியாது. பலம் கொண்ட அளவுக்கு காற்றை உள்ளே செலுத்த வேண்டும். அக்காற்றின் அளவைப் பொறுத்தே இசையின் தன்மை இருக்கும்’’ என்கிறார் சென்னை இசைக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுப்புலட்சுமி மோகன்.
இக்கருவியை ஒருவர் மட்டுமே தாங்கிப் பிடித்து வாசிப்பது சிரமம். தொய்ந்து கீழே விழாமல் நடுவில் இருவர் தாங்கிப்பிடித்துக் கொள்வதுண்டு. தொடக்கத்தில் இக்கருவி ஆபத்தை உணர்த்தும் குறியீட்டு ஒலியாகவும், குழுக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற சத்தமாகவும் பயன்பட்டதாகச் சொல்கிறார் டாக்டர் சுப்புலட்சுமி. பிற்காலத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் விழாக்களை அறிவிக்க, அரசர் வருகையை உணர்த்த இசைக்கப்பட்டது. இப்போது இக்கருவி வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.
இக்கருவியில் விரல்துளைகள் இல்லை. காற்றைச் செலுத்த முகப்பில் ஒரு சிறிய துளையும், இசை வெளியேற முடிவில் புனல்வடிவ துளையும் மட்டுமே இருக்கும். சிறுதாரை, கோணத்தாரை, நெடுந்தாரை என சிறிய வடிவ வேற்றுமைகளுடன் இக்கருவி பயன்படுத்தப் பட்டது.
இப்போது திருச்சி மற்றும் தஞ்சை சுந்தரப்பெருமாள் கோவில் பகுதிகளில் மட்டும் தாரைக்கருவிகளும், வாசிக்கும் கலைஞர்களும் மிஞ்சியிருக்கிறார்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் அருகிவிட்டதால், அழிவின் நுனியில் தொக்கி நிற்கிறது இந்த இசைக்கருவி.
சுந்தரப்பெருமாள் கோவிலில், லெட்சுமணன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் தாரை வாசிக்கிறார்கள். இக்குழுவில் உள்ள மார்க்கண்டேயன் என்பவர் பார்வையற்றவர். உத்திராபதிக்கு காது கேட்காது.
‘‘நமரி, எக்காளம், திருச்சின்னம், தாரை எல்லாம் மங்கள வாத்தியங்கள். எங்க தாத்தா காலத்தில கல்யாணம், காதுகுத்துன்னு வீட்டுல நடக்கிற சுபகாரியங்கள் எல்லாத்துக்கும் தாரைக்காரங்களை கூப்பிடுவாங்களாம். எந்நேரமும் வேலை இருக்குமாம். இப்போ அந்த பழக்கமெல்லாம் அருகிப்போச்சு. எப்பவாவது கட்சி மாநாடு, ஊர்வலங்களுக்கு அழைப்பு வரும். ஊர்வலத்துக்கு முன்னாடி வாசிச்சுக்கிட்டே நாங்க போவோம். எல்லாரும் இந்தக் கருவியை விசித்திரமா பாப்பாங்க. சாதாரணமா எல்லாரும் இந்தக் கருவியைக் கத்துக்க முடியாது. ரத்தத்துல ஊறணும். இதுக்குன்னு எந்த இலக்கண முறையும் கிடையாது. எங்க அப்பா ஊதுறதைப் பாத்து நாங்க கத்துக்கிட்டோம். ஆனா, எங்க புள்ளைகளுக்கு இதில ஆர்வமில்லே. மூச்சை தம் கட்டி ஊதுறதுக்கு இன்னைக்கு உள்ள பிள்ளைகளுக்கு வலிமை போதாது’’ என்கிறார் மார்க்கண்டேயன்.
தமிழகத்தில் ஆதரவற்றுப் போன இக்கருவி, மத்தியப் பிரதேசத்தில் ‘கோஹிக்’ என்ற பெயரிலும், உத்தரப் பிரதேசத்தில் ‘துரி’ என்ற பெயரிலும், கர்நாடகத்தில் ‘பாங்கு’ என்ற பெயரிலும், குஜராத்தில் ‘நாகபாணி’ என்ற பெயரிலும், மகாராஷ்டிராவில் ‘துதரி’ என்ற பெயரிலும், ஒரிசாவில் ‘கஹல்’ என்ற பெயரிலும், கங்கை சமவெளி பிரதேசத்தில் ‘கர்ண’ என்ற பெயரிலும் மிகச்சிறிய மாற்றங்களோடு பரவலாக புழக்கத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment